தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை வழங்கி ஊழல் நடந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை பரப்பியதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரவண பொய்கை குளம் அருகே வசித்து வரும் நந்தன் என்பவர் மீது திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் மனமுடைந்த நந்தனின் மூத்த மகன் குப்புசாமி, மன வருத்தத்தில் இருந்தவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இன்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச் ராஜா திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து தற்கொலை செய்துகொண்ட குப்புசாமி வீட்டிற்குச் சென்று அவரது தந்தை நந்தன் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, “தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை வழங்கி மாபெரும் ஊழல் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மலைவாழ் இனத்தை சேர்ந்த பிரபாகரன் என்பரை அவரது மனைவி கண்முன்னே அடித்து துன்புறுத்திய காவல்துறையினரை கண்டித்து முதலமைச்சர் இது குறித்து வாய் திறக்காதது கண்டிக்கத்தக்கது. மேலும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மகளை காதலித்த சதீஷ் என்பவரை திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சட்டவிரோதமாக 60 நாட்களாக அடைத்து வைத்து அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர். அவரை ஆட்கொணர்வு சட்டம் மூலம் வெளியில் கொண்டு வந்தனர். நந்தன் மீது பொய் வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தூய கிருபை மேல்நிலைப்பள்ளியில் பயின்ற லாவண்யா இறந்த விவகாரத்தில் ஏன் முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட யாரும் வாய் திறக்கவில்லை? திருத்தணியில் பாதிக்கப்பட்ட நந்தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.