வேலூர் மாநகராட்சித் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதில் 8 மாதங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மக்கள் உயிரை காப்பதிலும் சென்றுவிட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி ஸ்டாலினிடம் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், ஊழல் எப்படி செய்ய வேண்டும் என்றால், அதை எடப்பாடி பழனிசாமியிடம் கற்றுக் கொள்ளுங்கள்
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், 234 எம்.எல்.ஏ.க்களை துச்சமாக நினைத்து முகத்தில் அடிப்பது போல் அதை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். இது வரை எந்த ஆளுநரும் செய்யாதது இது. அதை இந்த ஆளுநர் செய்துவிட்டார். ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? அதே வேகத்தில் சுவற்றில் அடித்த பந்து போல தற்போது மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டோம். இப்போது, ஆளுநர் அதை திருப்பி அனுப்ப முடியாது. ஒன்று, அவரே அதை வைத்துக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். அவர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டால் விட்டு விடுவோம். அப்படி இல்லாவிட்டால் ஆண்டு முழுவதும் திட்டிக்கொண்டே இருப்போம்.
மக்களுக்கு அனைத்து வளர்ச்சிப் பணிகள் அடிப்படை வசதிகளை கொண்டு செல்வது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. கட்சி எனக்கு என்ன செய்தது எனக் கேட்பவன், கட்சிக்கு ஏற்பட்ட தொற்று நோய். கட்சிக்காக நான் என்ன செய்தேன் என்பவன்தான் திமுகவின் ரத்த நாளம் என நம்முடைய தலைவர் கருணாநிதி கூறுவார். அவரது வழியில் செயல்பட்டு, வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்” என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.