குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுத்தால் இனி அந்த விழாவையே புறக்கணிப்போம் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்க அனைத்து மாநில விடுதலைப் போராட்ட வீரர்களும் புரிந்த ஈடு இணையற்ற தியாகம்தான் காரணமாகும். ஏதோ ஒருசில மாநிலங்களின் விடுதலை வீரர்கள் மட்டுமே இந்தியாவின் விடுதலைக்குக் காரணமாகக் கருதும் ஒன்றிய அரசின் போக்கு, விடுதலைக்காகப் போராடிய தியாக வீரர்களை அவமதிக்கும் போக்காகும்.
குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளைத் தேர்வு செய்யும் குழுதான் இதற்குப் பொறுப்பே தவிர, மத்திய அரசு இதற்குப் பொறுப்பல்ல என அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பொறுப்பற்றப் போக்காகும். இந்தக் குழுவை மத்திய அரசு தான் நியமித்திருக்கிறது. எனவே, குழுவின் செயல்களுக்கு அந்த அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். மத்திய அரசின் இந்த தகாதப் போக்குத் தொடருமேயானால், டெல்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்க மறுக்கும் நிலை உருவாகும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.