காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம் தி.மு.க., பிரமுகர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவர் சைலஜா கணவர் சேகர், 51; தி.மு.க., மாவட்ட பிரதிநிதி; முன்னாள் ஊராட்சி தலைவர்.நேற்று காலை 9:30 மணிக்கு, ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரி தெருவில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர்.மறைத்து வைத்திருந்த கத்தியால், சேகரின் முகம், கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி, தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிய அவரை, அவ்வழியே சென்ற பொதுமக்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சேகர் இறந்தார்.தகவல் அறிந்ததும், கொலை நடந்த பகுதியை காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்யபிரியா, போலீஸ் எஸ்.பி., சுதாகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக என, விசாரணையை துவக்கியுள்ள போலீசார், கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படை அமைத்துள்ளனர்.பதற்றம் ஏற்படாமல் இருக்க கோனேரிகுப்பத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பட்டப்பகலில் ஊராட்சி தலைவரின் கணவரும், தி.மு.க., பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.