பொங்கல் பரிசு பொருட்கள் தொடர்பான தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் புகார்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்த இருக்கிறார்.
பொங்கலுக்கு முன்பாக சிலருக்கு இந்த பரிசு பொருட்கள் வழங்க முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கும் பொங்கலுக்கு பின்பாக பரிசு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகளில் தொடர்ந்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் கரும்பு உட்பட மொத்தம் 20 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் இந்த பொருட்கள் தரமற்ற இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன . புளியில் பள்ளி இருந்ததாகவும், மிளகில் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் தூள், மிளகாய் தூளில் பவுடர் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் இருந்து மக்கள் இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதேபோல் வெல்லம் சரியாக இல்லை. வெல்லம் உருகி போய் தரமற்று இருந்தது என்றும் புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தார். புகார்களை தொடர்ந்து நேரடியாக களத்திற்கே சென்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். ஆனால் இதற்கு பின்பும் சில ரேஷன் கடைகளில் இருந்து மக்கள் பலர் இது தொடர்பாக புகார் வைத்து வந்தனர். முக்கியமாக பொங்கலுக்கு பின் வழங்கப்பட்ட பொருட்கள் மிகவும் மோசமாக இருந்ததாக புகார் வைக்கப்பட்டது.
அதன்படி மூன்று விதமான புகார்கள் இதில் வைக்கப்பட்டன. வழங்கப்பட்ட பொருட்கள் எதுவும் சரியான தரமில்லை. பல பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. தரமற்ற வடஇந்திய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக நாளை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் களமிறங்கி ஆலோசனை செய்ய இருக்கிறார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்த அதிகாரிகள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது, ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் கலப்பட பொருட்களை வழங்கியதா என்று ஆலோசனை செய்யப்பட உள்ளது. இது பற்றி முதல்வர் ஸ்டாலின் நாளை தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்த இருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முழுக்க வந்த புகார்கள் என்னென்ன என்று ஆலோசனை செய்யப்படும். அதேபோல் இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும். இது போக இனி என்ன செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்படும். இந்த ஆலோசனைக்கு பின்பாக இது தொடர்பாக முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.