திருச்சி மின்வாரிய அதிகாரி உள்பட இரண்டு பேர் சிக்கினர்
லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில் ரூபாய் 10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செய்பொறியாளர்கள் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கே கே நகரில்
மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியதாவது:
திருச்சி கே கே நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கேகே நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் அரங்கம் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பித்தார்.தன் பெயரில் மின் இணைப்பு பெற கேகே நகர் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (வயது 58) என்பவரை அணுகி விவரத்தை கேட்டார். அப்போது சந்திரசேகர்
மின் இணைப்பு கொடுக்க ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துணை கண்காணிப்பாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி இன்று மதியம் லஞ்சப் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை சீனிவாசன்யிடம் கொடுத்து அதனை சந்திரசேகரிடம் கொடுக்க சொன்னார்கள். இதையடுத்து இன்று மின்வாரிய அலுவலகத்தில் சீனிவாசன் பணத்தை உதவி செய்பொறியாளர்சந்திரசேகரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த பணத்தை தனது தனிப்பட்ட உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (வயது 34) என்பவரிடம் கொடுத்து அவர் வைத்திருந்த போது கையும் களவுமாக இருவரும் பிடிபட்டனர். இதையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கேகே நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கேகே நகர் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.