Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

0

 

திருச்சி, டிச.29-
மு க ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றுப்பாதையில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் வருகை
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜிநகர் கேர் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
இவ்விழாவில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பயனாளிகள் மற்றும் கட்சியினர் பல்வேறு வாகனங்களில் வருகைதர இருப்பதால், விழா நடைபெறும் நாளான 30-ந் தேதியன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திண்டுக்கல்லிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி இயக்குவதற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் அனைத்தும் அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மன்னார்புரம் சென்று சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும்.

திண்டுக்கலிருந்து திருச்சி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் அனைத்தும் மணப்பாறை, விராலிமலை வழியாக மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம் வழியாக மத்திய பஸ் நிலையம் சென்றடைய வேண்டும்.
திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று கரூர்-திருச்சி பிரதான சாலை வந்து ஜீயபுரம் வழியாக திருச்சி வந்து சென்னை செல்ல வேண்டும். திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் இலகுரகம் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூர், புதுக்கோட்டை சுற்று வட்ட சாலை வழியாக துவாக்குடி அடைந்து தஞ்சாவூர் செல்ல வேண்டும்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் குறித்து வாகன ஓட்டுநர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்