திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 80 வயது தாத்தாவின் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி மார்ச் 8 : திருவரங்கம் தாலுகா மணிகண்டம் பஞ்சாயத்து செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது80). கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது மதுரை பைபாஸ் பஞ்சப்பூர் அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் உதவியுடன் இவரை மீட்டு நாகமங்கலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மார்ச் 6ந் தேதி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வீரப்பன் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததன் பேரில் அவரது உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்து சம்மதம்தெரிவித்தனர். இந்நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த வீரப்பனின் உடலுக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முதல் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், அரசு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்களும், இருபுறங்களிலும் கூடி நின்று வீரப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.